எ(ஏ)ன் காதலே…?!
நீ வெட்கம் கொண்டால்
புது ரோஜாக்களும் –
நாணி
தடுமாறித் தன் தலை குனியும்.
உன் புன்னகை மிளிர்ந்திட்டால்
மொட்டவிழும் முல்லைகளும்
புறமுதுகிட்டுத் தோற்றோடும்!
உன் கண்கள் தாம் அசைந்தால்
வண்டுகளும் தன் இனமென்று
அருகே வந்து சுற்றி
மொய்க்கும்.
உன் துவளும் இடை கண்டு
‘உடுக்கை’யும் அயர்ந்துபோய்
படுக்கையில் ஓய்ந்து
வீழும்.
நீ தளிர் நடை நடந்தாலோ
அன்னப் பறவையும் சற்றே
அசந்து அசைவற்று நிற்கும்.
உன் விரலழகைக் கண்டால்
காந்தள் மலர்களும் தன்
பொறாமையில் காந்தலாகும்.
தினமும் எனக்குக் கனா
தரும்
என் கனவுலகில் உலாவரும்
ஆசை ஆதர்சக் காதலியே
மனங்கவர்ந்தும் முகமறியா
மாமரத்துக் குயி(ர)ல் ஆனவளே-
எங்கே பிறந்திருக்கிறாய்
நீ?
ரவிஜி…@ மாயவரத்தான்
எம்ஜிஆர்
(புகைப்படங்கள் : நன்றி கூகிள்)
(வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தபொழுது பதிவிட்டது)


