Friday 7 November 2014

விஜிகே-12 வெண்மை சற்றே உண்மை! விமர்சனம்!!!


விஜிகே-12 உண்மை சற்றே வெண்மை! விமர்சனம்!!!

சொல்லாத சொல்லுக்கு - விலையேதுமில்லை! செல்லாத விமர்சனத்திற்கு – பரிசேதுமில்லை!!! (ஆனால் அதன் பின்னர் கிடைத்ததோ - பெரும் பொக்கிஷம்!!!)
     இந்த விமர்சனப் போட்டியைப்பற்றிக் கேள்விப்பட்டு நான் எழுதிய முதல் விமர்சனம்! நண்பர் சொன்ன இ-மெயில் ஐடியை அரைகுறையாகக் காதில் வாங்கிக்கொண்டு valambal@gmail.com-ற்கு பதிலாக   balambal@gmail.com அனுப்பிவிட்டேன்! பின்னர் வாத்தியாருக்கு சரியான மெயில் ஐடிக்கு மீண்டும் அனுப்பி அவரது கருத்தைக்கேட்டேன்! மிகவும் பெருந்தன்மையுடன் அவரது கருத்தோடு அன்பையும் உற்சாகத்தையும் சேர்த்து பதிலளித்திருந்தார்! விஜிகே அவர்களின் உள்ளம் உண்மை முற்றிலும் வெண்மை என்பது எனக்குப் புரிந்தது!! அடுத்த விஜிகே-13ல் மூன்றாம் பரிசோடு எனது வெற்றிக்கணக்கு துவங்கியது! பின்னர் விஜிகே என்ற ‘மா’மனிதரின் மனதில் இடம் கிடைத்து ‘இதயக்கனி’யாகவும் பதவி உயர்வு பெற்றது தனிக்கதை-தொடர்கதை! நான் எழுதிய முதல் விமர்சனம் இதோ - வார்த்தைக்கு வார்த்தை அப்படியே தந்துள்ளேன்! இதற்கு நடுவர் அவர்களும் கருத்திட்டால் மிகவும் மகிழ்வேன்!
என்றும் அன்புடன்,
உங்கள் எம்ஜிஆர்!!!

VGK REFERENCE NO.12.
திரு வை.கோ. அவர்களின் “ உண்மை சற்றே வெண்மை” சிறுகதைக்கான விமர்சனம்.
தூய்மை, உண்மை, என்றாலே வெண்மைதான் அடையாளப்படுத்தும் நிறமாக இருந்து வருகிறது. “சற்றே வெண்மை” என்ற வார்த்தைகள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கதைக்குள் வாசகனை இழுத்துச்செல்கிறது.
முன்னிலை, படர்க்கை அதிகமின்றி தன்னிலையிலேயே கதையை எழுதியிருப்பது கதாநாயகியின் உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்கிறது. பசுக்கள் மற்றும் கன்றுகளை அந்தக் குடும்பம் பராமரிக்கும் விதத்திலிருந்தும் வாயில்லா ஜீவன்களையும் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே கருதுவதும் பாசமுள்ள ஜீவகாருண்ய சிந்தனையுள்ள மனிதர்களாக அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் “கோமாதா எங்கள் குலமாதா” என்று இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைகிறது. பசுக்களே குடும்பத்தின் வருமானத்திற்கு வழி செய்வதாக வாழ்வாதரத்திற்கு காரணமாக இருந்தாலும் கன்றுகள் குடித்து எஞ்சிய பாலைக்கொண்டே வருமானத்திற்கு வழிவகை செய்துகொள்வது கன்றுகளையும் மகளைப்போலவே கருதுவதை ஆழத்துடன் வெளிப்படுத்துகிறது.
மகளுக்குத் தேவையான நகைகள், பணம் என்று எல்லாவற்றையும் சேமித்துவைத்தும்கூட சாதகம் - சாதகமின்றிப் போனதாலும் சில குறைகளாலும் திருமணம் தள்ளிப்போகின்ற நிலை-
இதற்கிடையில், ஓரிரு பசுக்களே இருந்த என் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பல பசுமாடுகள் புதியதாக வந்து, சுமார் நாலு மாடுகளுக்கு பிரஸவங்கள் நிகழ்ந்து இன்று ஆறு பசுக்களும், எட்டு கன்றுக்குட்டிகளுமாக ஆகியுள்ளன.”
என்ற வரிகளின் மூலமாக பசுக்களுக்கும்கூட குடும்பம் விருத்தியான நிலையும், மகளுக்கு ஏற்பட்ட தேக்கமும் வருத்தத்துடன் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. மேலும் மகளின் வளர்ச்சியோடு பசுக்களும் கன்றுகளுடன் சேர்ந்த தந்தையின் பொருளாதார வளர்ச்சியும் ஒரு சினிமா இயக்குநரின் திரைக்கதை முத்திரையோடு எழுதப்பட்டுள்ளது.

ஒரு சிறிய பசுமாட்டுப் பண்ணை நடத்துபவரின் பெண் தானே! பெரியதாக என்ன சீர் செலுத்தி செய்து விடப்போகிறார்கள்!” என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம் என் திருமணம் தடைபடுவதற்கு.” என்ற வரிகள் என்னதான் பொருளாதாரத்தில் உயர்ந்து நின்றாலும் குடும்பத்தலைவரின் வேலை திருமணச் சந்தையில் முக்கியமான ஒன்றாகக்கருதப்படுவதை எடுத்துச்சொல்கிறது.
ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணு” என்ற உலக வழக்கிற்கு எதிராக உண்மையில் ஒரு பொய்யும் சொல்ல விரும்பாத குடும்பம் - அற்புதம். கதாநாயகியின் பாத்திரப்படைப்பு முத்தாய்ப்பு. உண்மை சொல்லும் காரணத்தாலேயே திருமணத்தடை ஏற்படுவது “வெண்ணிறப் புள்ளியே இவளது வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாய் உறுத்துவது –

உண்மையை இப்போது மறைத்துவிட்டுபிறகு இந்த ஒரு மிகச்சிறிய வெண்மைப் பிரச்சனையால்என் இல்வாழ்க்கை கருமையாகி விடக்கூடாதே என்று மிகவும் கவலைப்படுகிறோம்”
என்ற வரிகள் மூலமாக பெண்ணினத்தின் குமுறலாகவே வெளிப்படுகிறது. ஒரு ஐந்தறிவு ஜீவனால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிவதோடு அதற்கு வடிகாலும் ஏற்படுவது யதார்த்தமாக நிகழும்போது அழகும் குணமும் நிறைந்து நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தும் திருமணத்திற்கு ஏங்கி நிற்கும் அவல நிலை கதாநாயகிக்கு ஏற்படுவது வாசகனுக்கு கதாசிரியர்மீது கோபத்தையே உண்டுபண்ணக்கூடும்.
ஆதிமனிதனிடமிருந்து பல படிகள் நாம் பரிணாம வளர்ச்சிபெற்று வந்துவிட்ட சூழ்நிலையிலும் நாகரீகம் என்ற பெயரில் ஆடைகள் அணிந்து என் உடலையும்அந்தக்குறையையும் நான் மறைக்க வேண்டியுள்ளது”
என்ற வரிகளின் குமுறல் ஒரு சிறியவெண்புள்ளி எந்த அளவிற்கு அப்பெண்ணை நொந்துபோகச் செய்துள்ளது என்பதையும் அதுவே பசுவிற்கு அழகோடு சேர்ந்து அதன் விலையையும் அதிகரிப்பதும் கோடிட்டுக்காட்டுகிறது.
நானும் ஒரு பெண் என்ற திரைப்படத்து கதாநாயகியின் மனநிலைக்கு நம் கதாநாயகியின் குமுறும் மனநிலை எள்ளளவும் குறைந்ததில்லை! அதில் கருப்பு இதில் வெண்மை!

முடிவாக, ஏற்கனவே பிறந்து வளர்ந்திருக்கும் இப்பெண்ணின் உடலில் காலம் இட்ட வெள்ளைப்புள்ளியைவிட அவளுக்கும் அவளின் குடும்பத்தார்க்கும் இருக்கும் வெ()ண்மை உள்ளத்தை உணர்ந்து அவளை மகிழ்வுடன் மணக்க முன்வரும் அந்த மனிதன் விரைவிலேயே அக்குடும்பத்தாரின் கண்ணில் படவேண்டும் என்ற உணர்வுடனேயே வேண்டுதலுடனேயே வாசகன் கதையைப் படித்து முடிக்கிறான்.
அருமையான கதைக்கரு, கதைத்தளம், மற்றும் பாத்திரப்படைப்புகள். விழிப்புணர்வைத்தூண்டும் கதை. வாழ்த்துக்கள்!

11 comments:

  1. //விஜிகே-12 வெண்மை சற்றே உண்மை! விமர்சனம்!!!

    விஜிகே-12 வெண்மை சற்றே உண்மை! விமர்சனம்!!!//

    அன்பு நண்பரே !

    வணக்கம். மேற்படி தலைப்பினை ஏதோ ஒரு அவசரத்தில் தவறாக எழுதியுள்ளீர்கள்.

    ’VGK-12 உண்மை சற்றே வெண்மை’

    என்பதே என் கதையின் உண்மையான தலைப்பாகும். அதை முதலில் மாற்றி விடவும்.

    VGK

    ReplyDelete
  2. ’நானும் ஒரு பெண்’ திரைப்படத்தில் வரும் கருப்பழகி விஜயகுமாரியுடன் இந்த என் சிவத்த கதாநாயகியை ’மனக்குமறலுக்காக மட்டுமே’ தாங்கள் ஒப்பிட்டுள்ளதை மிகவும் ரஸித்தேன்.

    >>>>>

    ReplyDelete
  3. //“உண்மையை இப்போது மறைத்துவிட்டு, பிறகு இந்த ஒரு மிகச்சிறிய வெண்மைப் பிரச்சனையால், என் இல்வாழ்க்கை கருமையாகி விடக்கூடாதே என்று மிகவும் கவலைப்படுகிறோம்”
    என்ற வரிகள் மூலமாக பெண்ணினத்தின் குமுறலாகவே வெளிப்படுகிறது. ஒரு ஐந்தறிவு ஜீவனால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிவதோடு அதற்கு வடிகாலும் ஏற்படுவது யதார்த்தமாக நிகழும்போது அழகும் குணமும் நிறைந்து நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தும் திருமணத்திற்கு ஏங்கி நிற்கும் அவல நிலை கதாநாயகிக்கு ஏற்படுவது வாசகனுக்கு கதாசிரியர்மீது கோபத்தையே உண்டுபண்ணக்கூடும்.//

    :))))) இதுபோன்ற ஒரு பெண்ணின் மனக்குமுறல் அல்லவா என்னை இந்தக்கதையையே எழுத வைத்துள்ளது. நான் என்ன செய்ய? கோபம் வந்து என்ன பயன்? அவளைக்கரம் பிடித்து அவள் ஏக்கத்தைப்போக்க இன்னும் எவனும் முன்வந்ததாகத் தெரியவில்லையே :)))))

    தங்கள் விமர்சனம் அருமை. போட்டியில் பங்கேற்க முயற்சித்ததற்கு என் நன்றிகள். இந்தக்கதையில் வரும் கதாநாயகி போலவே தங்களுக்கும் போட்டியில் கலந்துகொள்ள பிராப்தம் இல்லாமல் போய்விட்டது. பரவாயில்லை ....... விட்டுத் தள்ளுங்கள், ஸ்வாமி. :)

    என்றும் அன்புடன் VGK

    ReplyDelete
  4. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  5. அன்புடையீர்,

    வணக்கம்.

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    மேற்படி பதிவினில் அறிவிக்கப்பட்டுள்ள தங்களுக்கான பரிசுத்தொகை இன்று 10.11.2014 திங்கட்கிழமை தங்களின் வங்கிக்கணக்கினில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தங்களுக்கான பணம் கிடைக்கப்பட்ட விபரத்தை தாங்கள் உறுதிசெய்து மேற்படி பதிவினில் ஓர் பின்னூட்டம் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சியடைவேன். அவசரம் இல்லை. தங்களால் முடிந்தபோது, செளகர்யப்பட்டபோது உறுதி செய்தால் போதுமானது.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  6. நல்ல நடையில் எழுதப்பட்ட அழகிய விமர்சனம்!

    ReplyDelete
  7. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
  8. ஹலோ! நண்பரே !
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    ReplyDelete
  9. சகோதரரே தங்களை வலைச்சரத்தில் கோர்த்திருக்கிறேன் வருகை தந்து பார்வையிட அழைக்கிறேன்

    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
  10. "அன்பும் பண்பும் அழகுற இணந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!

    வலைப் பூ நண்பரே!
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    அன்புடனும், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete