Monday 6 January 2014

மெளனம்...!



மெளனம்
சரசரத்து சத்தமிடும் உலர்ந்த சருகுகள்
மெளனமாய் மணந்தரும் மலர்ந்த பூக்கள்.
உயிரையும் தருவதாய் பசப்பிடும் நா(வா)க்கு;
வாஞ்சையாய் வருடிடும்- மெளன அரவணைப்பு.
இருவேறு மொழிகளி(ல்)ன் புரியாத – காதல்;
புரிய வைத்திடும் கண்கள் சொல்லும் கதைகள்.
வாய்விட்டு சிரித்திருக்கும் - விட்டோடிடும் திரிப்பு
வாழ்வெங்கும் துணையாகும் - கண் கலங்கும் நட்பு.
அழிக்கும் சூறாவளி சு(உ)ழற்றி ஓலமிடும்.
அசையாத மலைமுகடு மெளனமாய் நிமிர்ந்து நிற்கும்.
வீழ்ந்திடும் மழை உரத்துப் பெய்யும்.
சூல் கொண்ட மேகம் அமைதியில் தவழும்.
பேசினாலும் புரியாது மற்ற மொழிகள்
பேசாமல் புன்னகைக்கும் உற்ற மெளனம்.
பிறக்கும் குழந்தையென துவக்கம் குரல் கொடுக்கும்.
முடிக்கும் மரணமென முழுமை மெளனிக்கும்.
ஆர்ப்பரிப்பை வெ(கொ)ல்ல வேண்டும்
மெளனம் பழக வேண்டும்.
போரின் முதல் பகை அமைதியின் மறுவகை
மெளனம் – பழ(க்)க வேண்டும்.
ரவிஜி…
(‘பரணி’  ஜனவரி – பிப்ரவரி 2007 இதழில் வெளியிட்ட புதுவை லெனின் பாரதிக்கு நன்றி)
(பட உதவி: நன்றி கூகிள்)

4 comments:

  1. /// சூல் கொண்ட மேகம் அமைதியில் தவழும்... ///

    என்னே வரிகள்...!!!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அன்பின் ரவிஜி,

    வணக்கம். நலமா.....

    உங்களது கவிதை இன்று எனது பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன். உங்கள் தகவலுக்காக.....

    http://venkatnagaraj.blogspot.com/2014/01/15.html

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ...அன்பின் இதயத்திற்கும், கவிதை பதிப்பிற்கும் அழகிய பூங்கொத்திற்கும் எனது வலைப்பூவின் அறிமுகத்திற்கும்...ரவிஜி...

      Delete